வாசகர் வட்டம்

Thursday, April 09, 2015

எழுத்தாளர் ஜெயகாந்தன் -எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன்-வீடியோ



ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் இன்று (புதன்கிழமை) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.
1950-ம் ஆண்டு இலக்கிய வாழ்க்கையை தொடங்கிய ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய நண்பர்களால் ஜே.கே என்று அழைக்கப்பட்டவர்.
சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படத்துறை என ஜெயகாந்தனின் படைப்புலகம் பரந்து விரிந்தது.
ஜெயகாந்தன் எழுதிய கதைகளை வைத்து, 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஊருக்கு நூறு பேர்' ஆகிய மூன்று திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. 'உன்னைப்போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்', 'புதுச்செருப்பு கடிக்கும்' ஆகிய மூன்று படங்களை ஜெயகாந்தன் இயக்கினார்.
கடந்த 2002- ம் ஆண்டு இலக்கிய உலகின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவருக்கு 2009- ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று(புதன்கிழமை) இரவு 9 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி மறைந்தார்.


நன்றி -த இந்து








இளம் வயதில் பலரை போல நானும் வெறி பிடித்த இவரின் வாசகன்...இவரது சிறுகதை நாவல் மட்டுமன்றி இவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் தொகுப்புகளை தேடி தேடி அலைந்து வாசித்து இருக்கிறேன்...இவர் தன்னை புதுமைபித்தனின்  தீவிர வாசகனாக கூறி கொள்ளுவதுண்டு..இவரை வாசித்த பிறகு தான் புதுமை பித்தனை பலமுறை வாசித்து இருக்கிறேன். 


பிற்காலத்தில் இவரது அரசியல் தளும்பல்கள் .தமிழ் மொழி எதிரான தமிழருக்கு எதிரான பேச்சுகளில் அதிருப்தி இருந்தாலும் இவரின் எழுத்து துள்ளலுக்கு என்றும் ரசிகனே...

 .இவரது எழுத்து பற்றி பிற்காலத்தில் பலர்  காரசாரமான விமர்சனத்தை வைத்திருந்த்தை அறிந்திருந்தாலும் ...


இன்றும் போற்றும் எனது துரோணருக்கு எனது அஞ்சலிகள்

No comments: